Thursday, July 3, 2008

நின்று போன தரிசனங்கள்



நமது சண்டைகளில் நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடித் துகள்களைக் கேட்டால்
அது கதறிச்சொல்லும்
நமதுறவின் சிதறாத உறுதிப்பாட்டை

நமது கோபங்களில் சிக்கிச்சீரழிந்த
தலையணைகள் கூறும்
நமது பந்தங்களின் நெருக்கமான
கன அழுத்தத்தை

மாட்டிவிட்டுத்தான் மறு வேலையென்று
அப்பாவின் வருகை பார்த்து
நீ அழுது வடித்த கண்ணீரை தாங்கிய
நமது வீட்டு முற்றம் சொல்லும்
வடியாத நமதன்பின் தேக்கங்களை

நீ தூங்குகையில் நானும்
நான் தூங்குகையில் நீயும்
ஒருவொருக்கொருவர் மாற்றி
மீசையிட்டுக்கொண்ட
பேனா பறைசாற்றும்
கசடறியா நம் தெய்வீக முகங்களை

நேற்று வந்த ஒருவனுக்காய் நீயும்
இன்று வந்த ஒருத்திக்காய் நானும்
நமது பிரியங்களின் ஒரு சதவீதத்தை
குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற
ஜீரணிக்க முடியா சில நிதர்சனங்களில்
நின்றுபோகின்றன நமது தரிசனங்கள்

அடுத்த ஜென்ம நம்பிக்கையை
அனுவளவு அடைந்திருப்பின்
கை கூப்பி உனை கேட்டிருப்பேன்
அதிலாவது பிரிவொன்றை ஏற்கா
தொப்புள் கொடி உறவை
வரமாய் வாங்கி வாவென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

நொந்துதல்களில் வெந்து தொலைப்போம்



குத்தீட்டியால் குருதி வழிய வழிய
குத்தப்படுவதை பிடித்தமென்கிறாயா?

உன்னுடமர்ந்து உரையாடிக்கொண்டே
உன்னை பிணமாய் படுக்க வைப்பவனில்
பாசம் கொல்லப் போகிறாயா?
ஆனால் அவ்விருவருமே கொலைகாரர்கள்.

கத்தக்கூடவியலா கத்தி முனையில்
களவாடப்படுவதை நேசித்துக்கொள்கிறாயா?
இரவு உன்னுடன் படுத்தெழுந்து
அதிகாலையில் அனைத்தையும்
அபகரிக்கப்போகும் சாணக்கியன் ஒருவனை
பூஜித்துக்கொள்ளப் போகிறாயா
ஆனால் அவ்விருவருமே திருடர்கள்

இரு பெரும் மூதேவிகளை விட
மூன்றாம் மூதேவி ஒருவனை
முக்கிய சீதேவியாக்கலாமென்று
மேதாவித்தனமாய் நீ யோசித்தால்
இரு கரம் நீட்டி உனை தூக்கியெடுத்து
பத்திரமாய் அவ்விருவரில் ஒருவரிடம் சேர்த்து
பணப்பெட்டியுடன் பதுங்கிக்கொள்வான்
அந்த மூன்றாம் மூதேவி

ஆபத்பாந்தவனாய் ஒன்று சொல்கிறேன்
எனக்குத்தெரிந்த வரை மட்டுமல்ல
எவருக்கும் தெரிந்த வரை
ஏக மனதான தீர்ப்பும் அதுதான்
உன் வீட்டு ஈசாணி மூலை தேடிப்பிடித்து
வடகிழக்காய் ஒருக்கணித்துப் படுத்து
பேசாமல் விதியை நொந்து கொள்
ஐம்பதாண்டு கால சுதந்திர இந்தியா
வேற்றுமையில் கண்ட ஒற்றுமைகளை விட
நொந்துதல்களில் கண்ட ஒற்றுமை அதிகம்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com