Wednesday, December 24, 2008

கோபம்

வருதலையுணர்த்தியபடி இருக்கும்
பாதச்சுவடுகளோ இன்னும் சலசல ஓசைகளோ
நிரம்பியேற்ற வண்ணம் அவன் வருதலிருப்பதில்லை
விருந்து கழிந்த திருமணப் பந்தியாய்
பனிக்காற்று பாதித்த ஓரிரு மாத சிசுப் பிண்டமாய்
அறியா முகவரியின் நிர்க்கதியற்ற ஏழைக் குடியானாய்
தான் மறைந்தும் மறையாதொரு நோயை
நிறைவாய் நிறுத்திப் போகிறான் எல்லா முறையும்
காரணங்களன்றி அவன் வருதலும்
மா ரணங்களன்றி அவன் செல்தலும் அமைவதில்லை
நாவுகள் முரண்பட்டு மோதும் எந்நேரமும்
சுக்கிரன் உச்சியிலிருப்பான் அவனுக்கு
உருவமற்ற தனியவனாகத்தான் உருப் பெறுகிறான்
எழுச்சியுறும் எப்பொழுதாவதான வேளைகளில்
இரண்டு கைகளில் இறுக்கித் திணித்து விடுகிறான்
இயலுமாக விளையாதோர் அசுர பலத்தை
இரண்டு கால்களும் நமதென்றாலும்
இறுக்கி இருத்தியமர்த்திக்கொண்டிருந்தாலும்
உடைத்துச் சீறிப் புறப்பட்டு விடுகின்றன
அவன் வழிகாட்டுதல்கள் நோக்கி
உக்கிரக போதையிலான தொடர் குடிகாரனாய்
நின்று ஆண்டுச் சென்ற அவனைப் பற்றி
வழிந்தோடிக் கிடக்கும் குருதிகளையும்
சிதறிக் கிடக்கும் இறைச்சித் துண்டுகளையும்
அவன் சென்ற பின்னரே வலியுணர்ந்து
அழுதரற்ற முடிகிறது
இனியுமவனை ஒருமுறையேனும் அண்டச் செய்யேனென்ற
அவன் ஒவ்வொரு செல்கையிலும் தெளியும் புத்தி
மகுடிப் பாம்பாய் பம்மிப் போகிறது
அவன் ஒவ்வொரு வருதலிலும்.

Thursday, December 18, 2008

மரணம்

விரிந்த முடி கோலமாய் குருதியகன்ற விழிகளில்
ஒப்பாரி கலந்த ஓராயிரம் பிராதிட்டுச் செல்வது
எம் குல பெண்களுக்கு வாடிக்கையானது

குண்டு கிழித்த மாமன் மாரில் ஒரு நாள்
வெள்ளமடித்த மகனைப் பாடி மறு நாள்
இடி மடி சேர்ந்த மூப்பெய்யா சகோதரனையும்
பாதைவழிப் பேருந்து பரலோகமிட்ட சித்தப்பனையும்
அடுப்புத் தீயிலோ அல்லாது பிற கடுப்புத் தீயிலோ
தோலுரிந்துத் தொங்கும் ஒரு உறவுக்காரியையும்
இடை இடையே இழுத்து அழுது குறுகிக் குறுத்து
தன் தேவனைப் பாடி காலனைச் சாடி
இறுதியாய் விதியென்று கதி சேர்கையில்
குசலம் கேட்டு குட்டையின் அடி கிண்டுகிறார்கள்
அது ஓய்ந்து கழிந்த அடுத்தடுத்த நாட்களிலும்

கதவிடுக்குகளில் கதறும் காற்றொலிகளில்
இரவின் மௌனமுடைக்கும் ஜந்துக்களான ரீங்காரங்களில்
சூழ்ந்த கதிர்களுக்கு மத்தியிலான கதிரவனில்
மாண்டவர்கள் கரைந்து கொண்டிருப்பதாய்
அலறுகிறார்கள் அவர்களை ஆண்டவர்கள்

அதிக பட்சம் இன்னும் பத்து நாட்கள்
பேரிடி சூழல் அகற்றும் பேறு கால அவகாசங்களைப் போல்
மந்திரமோ தந்திரமோ இரண்டும் சேரா எந்திரமோ!
எதைக்கொண்டாயினும் அம்மரணத்தை
முயற்சியுங்கள் முன்னால் கூற!
ஊனறுக்கும் உரத்தலுக்கு உரித்தாக்கட்டும் தங்களை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
www.junaid-hasani.blogspot.com

Sunday, December 14, 2008

தீவிரவாதம்

நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன
மனித மாமிச வாசனைகள்

என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்

நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன

தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்
எதுவுமற்ற எலும்போட்டுடலில் இணைக்கச் சொல்லி
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று

ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக
நின்று துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி
வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்

இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்

தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று
சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்

இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.

Friday, December 12, 2008

விதி எளியது

இப்பொழுதுதான் விடுபட்டேன்
நொடியில் தோன்றி விர்ரென்று படர்ந்த
மூர்க்கத்தனமான கணங்களில் நின்றும்
அது கழிந்தும் கழியாத வலிச் சுவடுகளில் நின்றும்
வலிக்குப் பின்னாலான சுவடேற்ற தழும்புகளில் நின்றும்
இப்பொழுதான் விடுபட்டேன்

இது இறுதி விடுபடுதலில்லையென்றும்
இன்னும் நீண்டு படரும் அதன் சாணக்கியத்தனமென்றும்
இருவருமே அறிவோம்

இருந்தாலும் தொடரூம் அதன் வழமை
இணங்க மறுக்கும் என் பிடிவாதங்கள்
இறுதியில் சரீரம் அறுத்து வலுத்திணித்தல்களுடன் கூடிய
கொடுமையான கணங்களும் அதன் ரணங்களும்

நானே வென்றதாய் நிமிர்ந்து கொக்கரிக்கும்
ஒவ்வொரு ஆரம்ப கட்டங்களிலும்

ப்பூவென ஊதி வென்றதாய் நகைத்துச் சிரிப்பேன்
கடைசிக் கட்டங்களில் வலியடக்கிக் கொண்டே

இதைத் தாண்டினுமொரு கூரான ஆயுதத் தேடலில்
வெளிப் பறந்து சென்றிருக்கிறது அது
இருந்தாலும் இறுதி வெற்றி எனக்கென்றான
கம்பீர வீற்றிருத்தலில் நான்
இருவருக்குமான ஜெயிப்பு தோப்பாட்டங்களில்
பாவம் உறுப்புகள்தான் தோற்று சோபை குன்றுகின்றன.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

Monday, December 8, 2008

சமூகம்

தெருவெங்கும் அல்லோலப்படுகின்றன
என் பற்றியான பேச்சுக்கள்
தெரு முக்கு பிள்ளையார் சந்நிதி முதல்
கடைசி அய்யனார் வீட்டு வரை
ஒவ்வொரு காற்றுத் துகள்களிலும்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
என் மீதான சாடல்கள்
இவன்தான் அவனென்று
பகிரங்கமாகவே சுட்டுகிறார்கள்
குழாயடிப் பெண்கள் தங்களுக்குள்
மூணுச் சீட்டாடும் வாலிபப் பட்டாளமும்
அடுத்தவர் தொடை சொறிகிறார்கள்
அருகில் வந்து விட்டேனென்று
விரைந்து செல்லும் கால்களும்
என் வீட்டருகில் மந்தப்படுகின்றன
புதிய செய்தி கிடைக்குமாவென்று
நன்றாய் தெரிந்தவர்களில் சிலர்
நிறுத்தி வைத்து குசலம் கேட்கிறார்கள்
இதெல்லாம் கால தேவனின் கட்டாயங்களென்று
அறிவுரைப்பதாய் தொண தொணத்துச் செல்கிறார்கள்
நரை தட்டிய கிழவர்கள்
திரும்ப திரும்ப
திரும்ப திரும்ப
ஆனவற்றை முதலிலிருந்து கேட்டு
வெந்த ரணத்தில் கத்தி கடப்பாறை பாய்ச்சுகிறது
உறவினப் பட்டாளமொன்று
இரண்டொரு நாட்கள் கழிந்து விட்டிருந்தது
சுத்தமாய் அமுங்கிப் போயிருந்தன
என் பற்றியான பேச்சுக்கள்
எத்தனை முறை தெருவில் நடந்தும்
என்னை ஏறெடுக்கவில்லை எவரும்
பரிதாபப்பட்டுக் கொண்டேன்
வசமாய் சிக்கியிருக்கும்
அந்த இன்னொருவனுக்காக.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

உற்றமும் சுற்றமும்

நன்றாய் புன்முறுவலித்து
எழுந்து இருக்கை தந்து
வராதவர்களையும் நலம் கேட்டு
திங்க தங்க வைத்தனுப்பினாலும்
குற்றம் சொல்லி அலைகின்றன சுற்றங்கள்
போஷாக்கில்லாத என் தேகம் பற்றி
மழிக்காத என் தாடி பற்றி
இஸ்திரியிடப்படா என் மேலாடை பற்றி
வஸ்துக்கள் சிதறிக் கிடக்கும்
ஒழுங்கற்ற என்னில்லம் பற்றி
இப்படியாய்
பல்கிப் பெருகிச் செல்கின்றன
அவர்களின் தண்டோராக்கள்
இப்பொழுதெல்லாம்
அரைக் கதவு திறந்து
உதடு விரியா புன்னகையிட்டு
கண்டிப்பாய் வருவதாய்
வெறும் வாய் வேடமிட்டு
கதவறைந்துச் சாத்தி விடுகிறேன்
மேட்டுக்குடியனாய்
வாசலிலேயே வைத்தனுப்பி விட்டானென்ற
ஒரேயொரு குற்றம் சொல்லி
சனியன்கள் தொலைந்து போகட்டுமென்று.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

மழைக் கால ஒரு மாலையில்..

ஒரு பெருமழையொன்றைப் பொழித்து
மிதமிஞ்சிப் போன ஈரங்களை
தூறல்களாய் சொட்டிட்டுக் கொண்டிருந்த
மேகங்கள் ஒளியத் தொடங்கும்
மஞ்சமிக்கும் மாலைப் பொழுதுகளில்
கதவு தட்டுகிறாய்

வீசிப் போன புயலும்
வெளி நனைத்துச் சென்ற மழையும்
முயன்றுத் தோற்றுக் களைத்த
உடலுதறச் செய்யும் ஜில்லிடுதல்களை
உன்னில் சொட்டிடும் துளிகளில்
பெற்றுத் தந்தாய்

சிறு கதையொன்றைச் சிலாகித்து
விரல் பற்றிச் சொடக்கிட்டு
சட்டையில் மறந்த பொத்தானிட்டு
சகலமும் நான் உனக்கென்று
சளைக்கச் சொல்லுகிறாய்

தொண தொணவெனாமலும்
நீண்டதொரு முற்றுமிடாமலும்
ஒவ்வொரு தலைப்புகளில்
ஒவ்வொரு மௌனமிட்டு
சேகரித்து உதிர்க்கிறாய்
நுனி நாக்கு வார்த்தைகளை

வெது வெதுப்பான குளிரின்
மெல்லிய புணர் பொழுதுகளில்
இளஞ் சூட்டுத் தேநீர் சுவையை
மெல்ல உடலில் பாய்ச்சுகிறாய்
என் உள்ளங்கை மீதான
உன் உள்ளங்கை ஸ்பரிசத்தில்

விசாலப்பட்ட மெத்தையிருந்தும்
அகலப்பட்ட போர்வை கிடந்தும்
மெத்தென்ற என் உடலில்
உன்னுடல் வளைத்த என் கரங்களில்
தூங்கிப் போதல் சுகமென்றும்
செத்துப் போதல் மா சுகமென்றும்
சிந்தையுறச் சொல்லுகிறாய்

என் தலை மயிர்க் கோரி
என் காய்ந்த உதட்டிதழ்களில்
உன் எச்சிலீரமிட்டு
சொல்லண்ணா போதையில் கிடத்தி
ஓடி ஒளியும் மாலை மேகங்களோடு
மறைந்து போகிறாய்

அதிகாலைத் தெருக்களில்
இரவு மழையின் மிச்சங்களாய்
இன்னும் காயாமல் கசிகின்றன
உன் இரவு நியாபகங்கள்.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

Wednesday, November 19, 2008

கெஞ்சுதல்கள்

"ம்" தொடங்கு
நெற்றி சுளித்த பாசாங்கு வேண்டாம்
கன்னம் அரிந்த பாவனை போதும்
மலர்ந்து நிற்கும் வீட்டு ரோஜா பற்றி
வழியிலறுந்த வலது செருப்பு வார் பற்றி
சலனமற்றுக் கரைந்த வார விடுமுறை பற்றி
தலைப்பு முக்கியமல்ல
இதழோரம் வார்த்தை கரைந்தோட வேண்டுமென்பது
அதி முக்கியம் எனக்கு
செவி கீறும் தூரத்து மேளச் சப்தங்கள்
முழங்கிப் போகட்டும் பரவாயில்லை
அடுத்து அணைத்து அமர்ந்திருக்கும்
மீறிய வருங்கால தலைவனால்
மருகும் வருங்கால தலைவியின்
முக்கலும் திக்கலுமான கலவிச் சப்தங்கள்
பரவாயில்லை நீ போனதும் கவனிக்கிறேன்
"ம்" சீக்கிரம்
வெற்று உளரல்களாயினும் சிரம் தாழ்த்துகிறேன்
வடகிழக்காயும் தென் மேற்காயும்
சுழன்றாட வேண்டும் உன்னடி நா
அதன் விசையழுத்தப்பட்ட உந்துதல்களில்
வட்டமாயும் சதுரமாயும் செவ்வகமாயும்
வடிவமேற்கவேண்டும் உன்னிதழ்
விரல் தீண்டா பரணி வயலினாய்
உன் வார்த்தையின் எச்சிலீரம் வேண்டி
என்னோடு காய்ந்து கிடக்கிறது காற்றும்
உன் நுனி நாக்குக் குழிப்பரப்பில்
சரி எனக்காய் இல்லாமலிருந்து போகட்டும்
அர்த்தமின்றி அவதானித்திருக்கும் அந்திப் பொழுதுகள்
அர்த்தமாகிப் போகட்டும்
பொதியாய் உன் வார்த்தைகள் சுமந்து
அவிழ்த்துப் போடு
உன் மௌன முடிச்சுகளை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

அக்கால ஆனந்தங்கள்

அது அந்தக் காலம்
கூரைக் கீற்று வழி மோகித்து
சிமிட்டொளிரும் நட்சத்திரங்களில்
சலனற்றுக் கரைந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
உச்சியில் உச்சந்தலையுரிக்கும்
வெயிலுக்கிரக வெம்மைகளின் கீழ்
இன்னும் திடமாய் ஊன்றுகிறேன்

அது அந்தக் காலம்
இடுப்பில் வழியும் சிறகடித்து
காற்று வழி மேகங்களினூடே
கனமற்றுத் திரிந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
கணம் வடியும் கவலைகள் சுமையள்ளி
ஏற்கவியலா எடைச் சுமையில்
தொப்பென்று விழுந்து செல்கிறேன்

அது அந்தக் காலம்
தேனொழுகும் நாவுகள் சூழ
ஆறிய தேநீர் குவளையேந்தி
அவரவர் அப்பட்டங்களை
அவிழ்ந்து கொண்ட காலம்
இப்படிச் சொல்லியபடியே
தாழ்த்தும் செவிகளின்றி
தனிமைச் சாளரங்களினூடே
வெறுமை வடியுமிதயத்தில்
இரகசியங்களள்ளித் திணிக்கிறேன்

அது அந்தக் காலம்
இதமாய் இழையோடும்
இளையராஜா இடைக்கால ராகங்களில்
இதயம் கரைந்தொழுகிய காலம்
இப்படிச் சொல்லியபடியே
கதறிக் காதுடைக்கும்
கானா ஒலியை
உச்சஸ்தாயில் ஒலி நீட்டி
உடல் சுருக்கி உறங்கிப் போகிறேன்

கால நீட்சிக் கரைவுகளில்
கரைந்தோடுபவர்கள் நாங்களல்லரென்று
இறுக்கிப் பிடித்தமர்ந்திருப்பவர்களையும்
இடம் பொருள் கால ஏவல்கள்
ஒரு கை பார்த்து விடுகின்றன.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

அக்காலக் காலைப் பொழுதுகள்

ஆயிரத்தெட்டு மதுக் குப்பிகள் சேர்ந்து
பிணைந்து கூடிக் கலந்த போதையை
இரண்டு கண்களில் இறுக்கித் திணித்து
கை கொட்டிச் சிரிக்கும் காலைப் பொழுதுகள்
சோம்பலானது தூங்கியெழுந்தவன் போலவே
இரவில் எட்டி இழுத்த போர்வையை
இறக்க ஆரம்பித்திருப்பான் சூரியன்
பாதியுறக்கம் இடறிய காட்டத்தால்
வெளித்துச் சிவந்திருக்கும் கண்களோடு
இறங்கிய கொண்டை ஏற்றி நிறுத்தி
நெட்டி முறித்த சேவல்கள்
துவக்கியிருக்கும் தங்கள் கூவல்களை
பூஜ்யம் ஒன்றாகி
ஒன்று ஐந்தாகி
ஐந்து பத்தாகி
சிறுந்தூறல்கள் வலுத்த பெரு மழையாய்
தெருவில் பெருகிக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்
கறுமையடர்ந்த இல்லத்தறைகளை
சாத்தப்பட்ட ஜன்னல் பொந்துகளினூடே
வெள்ளையடித்துக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள்
என்னைத் தவிர எல்லாம் எழுந்ததாய்
கால்மாட்டிலமர்ந்து கெஞ்சுமம்மாவை
பொய்யளாக்கும்
அடுத்துறங்கும் அக்காளை எழுப்பும்
அப்பாவிற்கான கூப்பாடுகள்
ஐயா ராசா செல்லம்
கோப்பையில் வழியும் தேநீரோடு
அவளுதடுகளில் வழியும் வார்த்தைகள்
எத்தனைக் காலைகள் கண்டும்
இதமளிக்கவில்லை எக்காலைகளும்
அக்காலைகளைப் போல்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

முதலாளி

காய்த்த உன் ரேகைகளால்
நெட்டி நிமிர்த்தப்படுகின்றன பல ஜாதகங்கள்
நெல்லுக்கலையும் ஜோசியக் கிளியாய்
கணித்துவிட்டு முடங்கிப் போகிறாய் நீ
நாளை விழக் கிடக்கும் நாலு சுவற்றுக்குள்
காற்றிறைத்த உள்ளங்கை சாத மணலை
உன் எலும்புக்கூட்டு மூச்சிலுத்து ஊதுகையில்
உன் கறி சேர்ந்த நாலு கறியிலொன்றை
நாசூக்காய் யோசித்தெடுப்பான் அவன்
மெலிந்த தேகத்து மேலஸ்திரம் உருவுகையில்
செருப்பிறைத்த கரும் புள்ளிக்காய்
கலங்கும் அவன் கண்கள்
தேனொழுகும் அவனகன்ற வாயில்
இம்மியளவும் மெய்யொழுகாது
வரும்படி வரவில் வாய் பிளந்து
வலது கை நீதானென்பான்
உதறிச் செல்வான் செல்கையில் செருப்பாய்
அதி அத்தியவாசியமல்லாதிற்காய் பல்லிலிக்கையில்
கூலியைக் குறைக்க குடைகிறான் எனக்கொள்
வீட்டுச் செல்லப் பிள்ளையெனும் அவன் பெண்டீர்
சீனியும் சீமையெண்ணையும் ரேஷனிடுகையில்
மறுநாள் அவ்வாசல் வரை விட்டால்
பூர்ண ஜென்ம புண்ணியமென மகிழ்
கறியும் கூட்டும் தேடி வந்து திணிக்கும்
நல்ல பழக்கம் வாய்க்கும் எப்பொழுதாவதளுக்கு
கூடி மிஞ்சிய இரண்டாம் நாளாணமாகிப் போனன்று
உடைந்த உள்ளமொட்டித் தேற்றிக்கொள்
உராய்கையில்தான் உயர்கிறீர்கள்
நீயும் சந்தனமும்.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

Sunday, October 26, 2008

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மயிரில் மையிட்டு
உயிரில் பொய்யிட்டு வைக்கும்
நாகரீக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

மூடிக் கிடத்தல்களை விட
ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து
அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண
அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வடித்துத் தீர்த்துக் களைத்த
இல்லாதார் வியர்வையுறிஞ்சி
உன் பித்தட்டிட்டு நிரப்பும்
உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்
பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்
மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு
வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்
அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே
இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே.

அருட்காட்சியகத்தில் பேனா

புதனுக்கும் புளுட்டோவிற்கும்
நகர விமானங்களில் நசுங்கிச் செல்லும்
முப்பத்தியோ நாப்பத்தியோ ஒரு நூற்றாண்டில்
மனிதங்களை எந்திரங்கள்
கட்டி மேய்த்து நெறிப்படுத்தியனுப்பும்
ஏறிய தலை ஏறியபடியிருக்கும்
எண்ணற்ற ஓர் அடுக்குமாடியொன்றில்
தனியாளாய் தம்பட்டமின்றி
கண்ணாடிப் பெட்டகத்தில்
சாய்ந்த படி நின்றிருக்குமது
மூடியைத் தொலைத்து
மழுங்கிய முனையில்
சீரற்று விரிந்த விரிசல்களுடன்
மூலைத் துணையில் முடங்கியிருக்குமதை
அநேகமாய் அது அந்தக் காலத்தவர்களின்
ஆயுதமாயிருந்திருக்கலாமென்பான்
எல்லாம் தெரிந்தவன் நானெனும்
என்னைப் போல் ஒருவன்
அப்படியெல்லாமில்லை!
அதனடியில் ஏதோ திரவமிட்டு
அவ்வப்போதைய நிகழ்வுகளை இருத்திக் கொள்ள
அறிவியலறியாத இருபத்தியோராம் நூற்றாண்டு
அப்பாவி மக்களின் அழகு படைப்பிது
பதியப்பட்டதை ஒப்பித்துக் கொண்டிருப்பான்
நிரலெழுதப்பட்ட எந்திர மனிதனொருவன்
எத்தனை காவியம் படைத்தும்
எதுவும் மிஞ்சா பயனில்
தன் காவியம் சொல்ல
தனியொரு மனிதன் இல்லையென்று
தன்னந்தனியாய் தனியொரு பாஷையில்
தவித்துப் புலம்பும் அந்த பேனா
அனைத்திற்குமோர் மாதிரியாய்
புள்ளி வைத்துத் துவக்கி விட்டேன் நான்
கணினித் திரையில்
விசைப் பலகை வழி கவிதை எழுத
மன்னிக்கவும்
கவிதை அடிக்க.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ.

Monday, October 6, 2008

அப்பாவி நாவுகள்

காலடி நாவுகள் மட்டுமே
சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை
திரி மட்டும் தீபமாகாததைப் போல்!

பழுத்துக் கனிந்த இதய அறைகளின்
அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன
இதமாய் உரசும் இனிய வார்த்தைகள்

இல்லாத இதய சுவர் மோதி
பிளிறப்படும் எதிரொலிகளில் தோன்றுகின்றன
ஆங்காரர்களின் ஆக்ரோஷ வார்த்தைகள்

நாவுகளை மௌனிக்க விட்டு
பார்வைகளில் பரிமாறிக் கொள்ளும்
பிரியாதார்களின் பிரிய வார்த்தைகள்
அவர்கள் இமைகளிலிருந்து இறங்குகின்றன

இருப்பதாய் இல்லாததைப் பகரும்
வாய் வீரா வேஷர்களின் வார்த்தைகள்
அவர்கள் உதட்டுச் சிவப்பிலிருந்தே
உருவகம் பெறுகின்றன

தீயிட்ட உப்பாய் வெடிக்கும்
கோபக் கணல் வார்த்தைகள்
பிரசவமாகின்றன எதிராளி நாவிலிருந்து

இச்சையின் உச்ச முச்சத்தில்
முந்திக்கொண்ட வரும்
முக்கல் முனகல் வார்த்தைகளின் தோற்றுவாய்கள்
அவரவர்களின் அந்தரங்க உறுப்புகளே!

எந்த உறுப்பு எதைப் பகர்ந்து வைத்தாலும்
பாவம் இந்த நாவைத் துண்டாடுவதாகத்தான்
சொல்லிப் போகிறார்கள் எதிராளிகள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.

Wednesday, September 24, 2008

இருண்ட காலம்

சுழலும் மின்விசிறியில்
இரைந்து கொண்டிருக்கின்றன
உன் நியாபகங்கள்

அணைக்கப்பட்ட மின் விளக்குகளில்
அணையாமல் சுடரிட்டுக்கொண்டிருக்கின்றன
நம் அந்தக் கால அந்திமங்கள்

வண்டூரும் சப்தங்களும்
மாட்டிகளிலிடப்பட்ட ஆடைகள்
உராயும் சப்தங்களும்
செவிப்பறைகளில் வந்து விழும்
அன்னியோன்யமற்ற அமைதிகளில்
ஆர்ப்பரித்த காலமெல்லாம்
அது ஒரு காலமென்றாகிப் போனது

கதறும் அலாரச் சப்தங்களும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
கரைந்து குரைத்து உறுமிச் செல்லும்
இரவு ஜுவிகளின்
இணக்கமற்ற இம்சைகளும்
ஒரு கணமாச்சும் எனனை திசை திருப்ப
ஓராயிரம் மறை படுத்தித்தான் எடுக்கின்றன

விட்டம் பார்த்து குத்திட்ட கண்கள்
புரளலின்றி நேர்த்தியான் நீட்டலில்
அம்சமாய் அடங்கியிருக்கும் உடல்
தொடையேறிய இரவாடையையும்
இழுக்க மறந்து
இறுக்கிப் பிடித்தமர்ந்திருக்கும் கரங்கள்
ஏறக்குறைய பிணத்தின் சாயலென்றாலும்
தொண்டைக்கும் வயிற்றுக்குமான
இடைப்பட்ட பகுதி மட்டும்
இன்னும் இல்லையென்றிருக்கிறது

கண் இறுக்கி மூடிய பின்னும்
இமைகளின் உட்புறத்தில் ஒளிந்து நிற்கிறாய்
இம்சித்தல் எங்கள் குலத்தொழிலென்று
கொக்கரித்தபடி

ஒவ்வொரு முதல் காதலிக்குப் பின்னும்
ஒவ்வொரு இரண்டாம் காதலிக்கு முன்னும்
இடைப்பட்ட இப்படியான இருண்ட காலங்கள்
இம்சிக்காமல் விடுவதில்லை
இப்படியான முதல் காதலர்களை.



எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.

Wednesday, August 27, 2008

மறந்த நியாபகம்

எல்லாம் இருந்தும்
இல்லாத ஒன்றின் தேடலில்
கனத்துப் போயிருக்கிறது மனம்

எடுத்து வைத்த எழுதாத பேனா
இல்லாத முடிக்கான
நாகரீக சீப்பு
உட்புறம் காலியான
மதிப்பான கைப் பை
அரசுப் பேருந்துக்காய்
தேடி எடுத்த சில்லறை
திருகலில் பாதியும்
தட்டலில் பாதையுமாய்
மூச்சிரைக்க ஓடும்
ஹைதர் கால கைக் கடிகாகரம்

எல்லாம் அச்சுப் பிசகாமல்
எடுத்து வைத்தும்
ஏதோ ஒன்று இல்லையென்று
இயம்பிக் கொண்டே இருக்கிறது
ஒன்று என்னுள்

வீடு தாண்டி வெகுதூரம்
உடல் பயணப்பட்ட பிறகும்
என் ஆறடி அறையையே
அளந்து கொண்டிருக்கிறது
என் மனம் மட்டும்.

இளித்தவருக்கு இளித்து
சம்பிரதாய விசாரிப்புகளுக்கு
நலம் சொல்லி
என்ன! சாப்பிடவா?
பந்தியில் பார்த்து
அறிவாய் கேட்ட ஒருத்தருக்கு
ஆம் சாப்டத்தான்
மேதாவியாய் பதிலுரைத்து
வேசியாய் என் உடல்
சகலருக்கும்
இசைந்தாடிக் கொண்டிருந்தும்
இரவுக் கோட்டானாய்
என் மனம்
என் அறையின்
மூலை முடுக்கெல்லாம்
மாறி மாறி அமர்ந்து கொணடிருக்கிறது

எதுவும் மறக்கப்படவில்லை
எல்லாம் சரியென்று
எத்தனை முறை
என் இதயத்திற்கு உரைத்தும்
பதறி பதறியே
பழக்கப்பட்டுப் போன இதயம்
பதற்றத்தை தணிக்க மறுக்கிறது
ஒவ்வொரு பயணங்களிலும்.

Friday, August 22, 2008

தடயங்கள்

எவருமற்ற அனாயாச சூழல்களில்
இறக்கி விடப்படும்
பாலைவன கால் தடங்களாய்
இருத்தி விடப்படுகின்றன
சிலர்களின்
மறைவுகளுக்குப் பின்னாலான
மிஞ்சிய வாழ்க்கைத் தடயங்கள்!
காற்றோடு சேர்ந்து காலங்களும்
கபளீகரம் செய்து விடுகின்றன
எந்த வடுவையும் மிச்சமிடாமல்

கூடிக் கழித்த பொழுதுகளில்
கற்பாறைச் சிதைவுகளிலோ
வானுயர்ந்த மர மட்டைகளிலோ
உரித்துச் சிதைத்துப் பொறிக்கப்படும்
ஈரடிப் பெயர்களாய்
எந்த ஆக்கப் பூர்வமுமின்றி
வெறும் பெயர்களாய் எஞ்சி நிற்கின்றன
தான்தோன்றினர்களின்
சில தற்புகழ்ச்சித் தடயங்கள்

பருந்துகளும் கோட்டான்களும்
நோட்டமிட்டுத் திரியும்
பழைய பாழ் பங்களாக்களாய்
சோக கீதமிசைத்துத் திரிகின்றன
எல்லாம் பெற்று வாழ்ந்து
எதுவுமற்று மறைந்த
மாண்புமிகுக்கள்
மண்ணில் விட்ட தடையங்கள்

நாலைந்து செந்நாய்கள் கூடி
மிச்சமிட்டுச் சென்ற
பருத்துக் கொழுத்த
பிணத்தின் தடயங்களாய்
உருட்டிப் புரட்டிக் கொழுத்த
ஊளைச் சதைகளின்
பெருகி வலுத்தத் தடையங்களைக் கூட
தின்று தெறித்து ஏப்பம் விடுகின்றன
பிணந் திண்ணி மணல்கள்.

எவரோ எப்போதோ விதைத்து
வளர்ந்து வலுத்து நிற்கும்
உருண்டு திரண்ட ஆலமரமாய்
தன் காலத்திற்கப்பாலும்
நிழலிட்டுக் குளிரூட்டிக் கொண்டிருக்கின்றன
நான் வருத்தி நாம் வளர்த்த
நல்லவர்கள் தடயங்கள் மட்டும்.

Tuesday, August 12, 2008

கவிதைக் கலைப்புகள்



எங்கோ விரியும்
கண்களுக்குள் அடங்கா
உள்ளங்களில் நின்று போகும்
ஒற்றைக் காட்சிகள்

மீண்டும் ஒரு முறை
தேடியெடுத்து தூசி தட்டி
இதய நாளங்களுக்கு
அஞ்சலனுப்புகின்றன
எப்பொழுதோ
வேண்டா வெறுப்பாய்
சேமிக்கத் திணிக்கப்பட்டிருந்த
மூளை நரம்புகள்

பெரிய காட்சிகளென்றும்
சிதைந்து போன
தோரணைகளென்றும்
புறக்கணித்தல்களோ
காரணமிடும் ஒத்திப்போடல்களோ அன்றி
அப்படியே இதயமும்
காட்சிகளை தின்று
அதன் சாறை உமிழ்கிறது

சாறைப் பிழிந்து
வார்த்தைகளெடுக்கும்
மற்றொரு வித சுத்திகரிப்புகளில்
அந்தச் சாறுகள்
அலைக்கழிக்கப்படுகின்றன
இதயத்திற்கும் நாவுக்குமாய்.

தோற்றமெடுத்த வார்த்தைகளை
அல்லவைகளை சலித்து
ஏற்றவைகளை குவித்தெடுத்து
துப்புவதற்கு தோதுவாய்
நாவுகள்
தங்கள் நுனிகளில்
சேமித்துக் கொண்டிருக்கும்
அனாயாச சூழல்களில்
ஒலிக்கும் தொலைபேசியும்
அழைக்கும் அலுவல்களும்
கதற கதற
அறுத்துப் போடுகின்றன
முக்கால் வாசி ஜனித்துப் போன
பச்சிளங் கவிதைகளை.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.


Tuesday, August 5, 2008

புரியாத பாதைகள்



எதுவும் புலப்படவில்லை
சுற்றியிருக்கும் ஓராயிரம் பாதைகளில்
எந்தப் பாதையை ஏறெடுப்பதென்று

கம்பளம் விரித்தாற் போல்
பவுசாய் தெரியும்
பசேலென்ற பாதைகளெல்லாம்
பாதியில் நின்றும் போகலாம்

பாதையே தெரியாத பல பாதைகள்
கொண்டு போயும் சேர்க்கலாம்

எல்லோரும் செல்கிறார்களென்று
எதிலொன்றோ பயணிக்கப்போய்
எக்குத்தப்பாய் மாட்டிக் கொள்கையில்
எல்லோரையும் குறைபட்டு லாபமில்லை.

சொல்லாமல் சென்றடைந்தவனிடம்
சொல்லியிருந்தால் வந்திருப்பேனென்று
நொந்து கொள்வதில் அர்த்தம் இல்லை.

இப்படி ஏறி அப்படி இறங்கும்
குறுக்குப் பாதை காட்டுங்கள்
கோடி பணம் தருகிறேனென்று
எக்குத்தப்பாய் சிந்திக்கும்
அறிவு ஜீவிகள் ஒரு புறம்

சென்றவன் வந்து
வழி சொல்வானென்று
செல்லும் பாதையில்
கடை விரித்தமர்ந்திருக்கும்
மேதாவிகள் மறு புறம்

பாதையில் வாய்த்துவிட்டதென்பதற்காய்
கல்லிடமும் மரத்திடமும்
வழித்தடம் கேட்டு புரளும்
மகா மேதாவிகள் மத்தியப் புறம்

பாதசாரிகளை இம்சிக்கா
அவரவர்களின் எந்தப் பாதையும்
நல்ல பாதையென
நானும் நாலு வார்த்தை
சொல்லப் போனால்
என்னிடமும் ஒருவன் வருகிறான்
மாலையைத் தூக்கிக்கொண்டு
நீங்கள்தான் எனக்கு
நல்லதொரு வழியை காட்டவேண்டுமென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



அடை முட்டைகள்

எதிர் பாராதவாறு
காதுகளில் அறையப்படும்
எதிராளிகளின் சில வார்த்தைகள்
அப்படியே புடம் போட்டு
அமர்ந்து கொள்கின்றன

அவ்வப்போது வலியைக் கூட்டி
இருத்தலை உணர்த்தும் ரணங்களாய்
உடற்கூறுகளில் ஊடுருவிப் போய்
உறுத்திக்கொண்டே இருக்கின்றன

இருந்த போதும் நொந்து கொண்டு
இல்லாத போது வெந்து கொண்டு
இப்படியாய் சராசரி வாழ்க்கை
ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருப்பினும்
அந்த வார்த்தைகள் மட்டும்
சற்று முன் மூட்டிய தணலாய்
கொட்ட கொட்ட விழித்திருக்கின்றன

அவ்வப்போது வாழ்வில் நிகழும்
பெருத்த ஏற்றங்களுக்கு கூட
அவ்வார்த்தைகள் சமாதானமடைவதில்லை

வீறிட்டு அழும் குழந்தையை
தேற்றும் கிலுகிலுப்பைகளாய்
தற்சமய சரிகட்டுதல்களுக்கெல்லாம்
அதன் வீரியம் குறைந்து போவதில்லை

கர்ப்ப காலம் கழிந்த
கருவறைக் குழந்தையாய்...

பூமியைப் பிளந்து பீய்ச்சியடிக்கும்
எரிமலைக் குழம்புகளாய்...

எதிராளியின் முன் தோன்றும்
முழு உருவம் அடையும் வரை
உடலின் உஷ்ணத்திற்குள்
அடை முட்டைகளாகவே
அடங்கிக் கிடக்கின்றன

எவருடைய ஏடாகூட
எக்குத்தப்பான வார்த்தைகளுக்காக
நுனி மூக்கு கோபத்தில்
அவசர வார்த்தைப் பிரயோகம் செய்து
அதை குறை பிரசவமாக்கி விடாதீர்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

விசும்பல்கள்


பகல்களின்
ஆதாயச் சப்தங்களில்
அமுங்கிப் போகின்றன
பாவப்பட்ட சிலர்களின்
பரிதாபத்திற்குரிய
விசும்பல்கள்

ஆதிக்கக்கார அடக்குமுறைகளுக்கும்
கசிந்து வெளியேறும்
மானமிழப்பு அஞ்சுதல்களுக்கும்
ஒத்திவைக்கப்பட்ட விசும்பல்கள்
மீண்டும் மையம் கொள்கின்றன
இமைகள் மூடிக்கொள்ளும்
இரவு நேரங்களில்

உயிர்க் கூடல்களின்
ஏற்ற இறக்க மூச்சுகளும்
நிசப்தம் கலைக்காத
உண்டு தெறித்த
வேட்டை நாய்களின்
இரவு ஊளைகளும்
தாளம் தப்பாமல்
காற்றுக்குத் தாளமிடும்
கதவுகளின்
தட தட சப்தங்களும்
மீண்டுமொரு முறை
அடக்கி வைக்கின்றன
விசும்பல்களை

வானின் நீலங்களாய்
நிலவின் களங்கங்களாய்
ஒட்டிக்கொண்டிருக்கும்
உடலுறுப்புக்களாய்
அப்படியே உறைந்து போய்
பழக்கப்பட்டுப் போகின்றன
அவர்களின் விசும்பல்கள்

எப்பொழுதாவது வழங்கப்படும்
பண்டிகைச் சலுகைகளாய்
அடுக்களை சுவர்களுக்குள்
முடித்துக் கொள்ள மட்டும்
சில விசும்பல்களுக்கு
அனுமதி அளிக்கப்படுகின்றன

விக்கி இழுத்து
உயிர் விடும்
அடிபட்ட பறவையாய்
விசும்பி விசும்பியே
உயிர் நீத்த
அல்பாயிசுக்காரர்களின்
துக்கம் கேட்கச் செல்கையில்
காதுகளை கொஞ்சம்
கூர் தீட்டிக் கொள்ளுங்கள்
காதுடைக்கும்
ஒப்பாரி சப்தங்களோடு
சில விசும்பல் ஒலிகளும்
காற்றில் கரைந்து வரக்கூடும்.



எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



காவு கொள்ளும் கண்கள்



கொல்லைப் புறங்களில்

நுழைந்து வெளியேறும்

சில கூடாத ஆசாமிகளாய்

இதயங்களை விட்டு விட்டு

கண்களின் வழியாக

உள்ளுக்கிறங்குகின்றன

சில காட்சிகள்



தரம் பிரித்து

தூசி தட்டி

மூளைக்கு அனுப்பும்

வண்ணான் பணி பற்றியெல்லாம்

கண்கள் கசக்கிக் கொண்டிருப்பதில்லை

தங்கள் மூளைகளை



காட்சிகளின்

முதல் பரிணாமங்களையும்

இறுதி முடிவுரைகளையும்

மூன்றாந்தர விஷயமாகத்தான்

கண்களின் கண்களில் படுகின்றன



காட்சியின் தத்ரூபம் பற்றிய

உள்ளம் எடுத்துரைக்கும்

உபதேசத்துக்கெல்லாம்

கண்கள் தாழ்த்தி விடுவதில்லை

தங்கள் காதுகளை



இருத்திக் கொண்ட

காட்சிகள் வழியே

விறு விறுவென்று

தன் கால்களை அசைத்து

பயணப்பட்டு விடுகின்றன

கண்கள்

பாதி பாதையில்

பாதை முடிந்த பிறகும்

உடுத்தியிருக்கும்

மேல் சட்டையாய்

தங்கள் பழிகளை

உருவிக் கொண்டு

கூசாமல்

இன்னொரு பயணங்களை

தேட ஆரம்பித்து விடுகின்றன



அறியாத புரியாத ஒருவன்தான்

எங்கிருந்தோ விரோதியாய்

குதிக்க வேண்டிய

அவசியங்களெல்லாம் இல்லை

சதா உங்களுக்காய்

அழுது வடிவதாய்

சொல்லிக் கொண்டிருக்கும் கண்கள்தான்

தேரிழுத்து தெருவிலிடும் பணிகளை

கச்சிதமாய் செய்து முடிக்கின்றன.



எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



Saturday, July 19, 2008

அலையுங்கள்!அலசுங்கள்!



உள்ளதை உள்ளபடி
உற்று நோக்குவதில்
சிறப்பென்ன உள்ளது!

கிளியை கிளியென்றிருந்தால்
அர்ச்சுனனும் இன்று
அரியா சுனன்தான்

பத்தோடு செல்லும் ஓநாய்களில்
பதினோராவது ஓநாய்
அரபி காட்டுமிராண்டியென்று
சென்றிருந்தால் முஹம்மது
விதி நொந்து
நாம் வீடுகளின்
நாய் தரிக்குமிடங்களிலெல்லாம
ஒரு அரபி நின்றிருப்பான்

அங்கங்கள் குலுங்க
தங்க மாந்தர்தம் செல்ல
கை கால் முளைத்த
இரண்டாம் மனித ஜாதியன்றி
வேறில்லையென்பவனை
ஆண்மையற்றவனென்று
அகிலமும் இகிழுரைக்கும்

பொருளை பொருளாயில்லாமல்
அதன் அருளின்
ஆழம் நோக்குங்கள்

கனம் உருட்டும் சக்கரங்களாய்
மனித கால்களையும்
கனி கொய்யும் துரட்டிகளாக
மனித கரங்களையம்
சுற்றிய உங்களருட்பார்வை
வற்றிப் போகாமல
சுற்ற விடுங்கள்
உலகம் சுற்றி.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி


Wednesday, July 16, 2008

முன் யோசி பின் செய்



கடந்து வந்த பாதைகளை
முதலிலிருந்து துவங்குவதைப் போல்,

சப்பி எறிந்த கொட்டைகளை
தட்டில் ஏந்தி தருவதைப் போல்,

கொஞ்சம் விவரமாகவும்
கொஞ்சம் விகாரமாகவும் வேண்டுமானால்
தொண்டை கக்கிப்போட்ட உணவுகளை
திரும்ப உள்ளுக்கனுப்பவதைப் போல்,

இப்படித்தானிருக்கிறது
இதை விட்டு அதைச் செய்திருக்கலாம்
இதற்கு பதிலாய் அதை படித்திருந்திருக்கலாம்
இவளை விட்டு அவளை கட்டியிருக்கலாம்
இப்படியாய் கழிந்து போன
கால நீட்சிகளை கட்டளைகளுக்கேற்ப
வளைத்துக்கொள்ள முயல்வதும்.

காலச் சக்கர சுழல்களில்
எட்டி விழும் திசைகளும்
ஒட்டி இருக்கும் துணிகளும்
சுற்றி கிடக்கும் சூழ்நிலையும்
கேட்டுப் பெறம் வரமில்லை

விதைகளை உற்பத்திப்பது
மரங்களாயினும்
விளையும் நிலங்களை
காற்றுதான் நிர்ணயிக்கிறது

முட்டி நிற்கும் பாதைகளில்
வந்த வழியை வசையாமல்
வெட்டி எடுத்து பாதை படைப்போம்.

Sunday, July 13, 2008

ஆஆஆஆஆஆஆஆசை






வாட்ட சாட்டமாய்
கொஞ்சம் புது நிறமாய்
பற்கள் எடுப்பாய்
என்றெல்லாம்
வர்ணிக்கமுடியா வஸ்துவது

நீட்டி மடக்கி வகுக்கும்
அளவுகளுக்குள் எல்லாம் அது
அடைந்து போவதில்லை

கடாசி எறியும்
கடவுத் தேதிகளும்
அதற்கில்லை

நாடி பிடித்து
நாளையைச் சொல்லும்
நாதர்கள் கூட
அதைப் பற்றி பேசுவதில்லை

கெஞ்சி கூத்தாடும்
சிறுபிள்ளையாய் சிலநேரம்

செய்து முடியென்ற
உரிமைக் கட்டளைகளின்
மொத்த உருவமாய் பல நேரம்

கத்தி முனையில்
காரியம் வாங்கும்
கள்வனாய் வெகு நேரம்

இப்படியாய் ஜனிக்கும்
அவற்றின் பல அவதாரங்கள்
தசாவதாரங்களையும் தாண்டி

மண்ணை வென்றவனும்
பொன்னை வென்றவனும்
அவர்களின் ‘என்னை’ வென்றவன்
எவனுமில்லை

அதைத்தான் அழிவின்
மூலப்பொருளென்ற புத்தனும் கூட
துறக்க வழி சொன்னான்
அழிக்க வழி தெரியாமல்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி


Saturday, July 12, 2008

ஜாதக விஞ்ஞானிகள



வறண்ட தொண்டையும்
வற்றிய வயிறுமாய்
ஏழாமிட சூரியப்பெயர்ச்சியை
வழியின் விழியாய் எதிர் நோக்கியிருக்கிறேன்
விரதத்தை விலக்கிக்கொள்ள

சுக்கிர உக்கிரமம் தணியட்டுமென்று
இயற்கை உபாதைகளை கூட
அந்தந்த இடங்களில்
அப்படியே இறுக்கியிருக்கிறேன்.

ராகுவும் கேதுவும் சற்று ஒழியட்டுமென்று
வாசல் தட்டிய தாபல்காரனையும்
வாசலோடு வைத்திருக்கிறேன்

மிதுன கோபால்
மேஷ ரமேஷ்
கடக சுந்தர்
நண்பர்களைக்கூட
இப்படித்தான் அழைக்கிறேன்

நெஞ்சைப்பிடித்து சாய்ந்த தந்தையையும்
வராண்டாவில் கிடத்திவிட்டு
சனியின் அனுகூலத்தை
நாட்காட்டியில் மேய்கிறேன்

கணிணியில் நிரல் எழுதும்
விஞ்ஞான யுகத்தில்
கணிணியில் ஜாதகம் எழுதும்
விஞ்ஞான ஜோஸியன் நான்.


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com



Wednesday, July 9, 2008

மயிரிழையில் மஞ்சம்



ஆடி அசைந்து அலுத்த
பாதி சதைகளும்
அலுப்புத் தட்டாமல் ஆட்டமிடும்
மீதி சதைகளும்
கவ்விப்பிடித்திருக்கின்றன
மொத்த சதைகளை.

ஓட்டம் கண்டே உறைந்து போன
கிழட்டுக் குருதிகளும்
உஷ்ணம் தணியாமல்
உறவாடிக் கொண்டிருக்கும்
அவற்றின் பேரன் பேத்திகளும்
அழுகிப்போகும் பிண்டத்திற்கு
உப்பிட்டுக்கொண்டிருக்கின்றன.

மெதுவாய் முறைத்துச்செல்லும்
சில சம்பிரதாய நினைவுகளும்
அருகில் வந்து எச்சரித்துச் செல்லும்
ஆரம்ப கால பிரயாசைகளும்
இன்னுமா இருக்கிறாயென்று
கூறுபோட்டுச் செல்லும்
சில விரோதிக் கனவுகளும்
நிலுவையிலாகா வண்ணம்
என்னை உயிருடையான் பட்டியிலில்
இன்னும் இழுத்திப்பிடித்திருக்கின்றன.

தொண்டை வரை எவ்வி விட்ட
உயிர்க்கற்றையை
கெஞ்சிக் கூத்தாடி உள் அனுப்பும்
தீவர பணியில் இறங்கியிருக்கின்றன
இவையனைத்தும சேர்ந்து.

பற்றியெரியும் ரோமில்
பிடிலிசைத்த பேதகனாய்
தூரத்தெரியும் ஒருத்தியின் முன்னழகில்
மஞ்சமிட்டக்கொண்டிருக்கும் என் மனதை
என்னவென்று சொல்வது!

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.
junaidhasani@gmail.காம்.

Tuesday, July 8, 2008

உஷ்……….. பேசாதீங்க




அளவு கோல் தேவையில்லை
அவ்வப்போது கடித்துக்கொள்ளும்
நாச்சேதாரமும் இல்லை
ஒன்றுமில்லாததிற்கெல்லாம்
காற்றில் வீணைமீட்டும் அவசியமில்லை
எப்படி பேசுவதன்று
தலையை பிடித்துக்கொள்ளவும்
இப்படியா பேசினேன்று
தலையில் அடித்துக்கொள்ளவும்
அவசியமில்லை
பழைய வார்த்தை
தங்கிப் போயிருக்குமோவென்று
பம்மிப் பேசவும் விம்மி அழுகவும்
தேவையே இல்லை
ஒரு வாசகமென்றாலும்
அது பெரு வாசகமென்று
முச்சந்தியில் நிற்க வைத்து
நாக்கைப்பிடுங்கும் கேள்வி
எப்பொழுது வருமென்று
எதிர்பார்க்கத்தேவையில்லை
உங்கள் நாவுகளே நீண்டு
உங்கள் கழுத்துக்களை
கட்டி நெறிக்கும்
கனவுகளை கண்டிப்பாய்
காணும் அவசியமில்லை
எல்லாவற்றிக்கும் மேலாய்
உள்ளாறும் தீயினால் சுட்ட புண்
ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று
கீழார்களிடமெல்லாம்
தவணை முறையில்
உபதேசம் வாங்கிக்கட்டிக்கொள்ளும்
நிலையெல்லாம் ஏற்படாது
ஒவ்வொரு சாதனைகளுக்குப்பின்
சில மௌனங்களும்
ஒவ்வொரு வேதனைகளுக்குப்பின்
சில நாவுகளும்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்துகொள்ளும்போது.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனி

Friday, July 4, 2008

கிராமச்சொத்து செத்துப்போச்சு

தனித்தமர்ந்து
கரித்துக்கொண்டிருக்கும் ஆதவன்,
கீற்றசைத்து
இன்னொரு தென்னையை அழைக்கும்
ஒரு தென்னை,
தான் அங்கிருப்பதை
எங்கிருக்கும் ஒன்றுக்கோ
முரசுறைக்கும் தோப்புக்குயில்,
இன்னொருவரின் வருகையை
வாய்பிளந்து வரவேற்கும்
ராட்சத கிணறு,
உன்னைக்காட்டிலும் பெரியவன் நான்
அருகிலிருக்கும் கடலைக்காட்டிடம்
எள்ளி நகைந்தாடும் சோளக்காடு,
அதற்கு கொஞ்சமதிகம்
இதற்கு குறைவென்ற
பாரபட்சம் பாரா
வயல்களுக்கு நீர் பட்டுவாடா செய்யும்
வாய்க்கால் வரப்புகள்,
குரைத்துத்துரத்த
ஒரு எளியவனைத் தேடி
நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும்
தோட்டத்து நாய்கள்,
அழகிய அந்த இயற்கைக்கு
திருஷ்டி பொம்மையாய்
களை பிடுங்கும்
அழுக்கடைந்த பெண்கள்,
வரப்போர குடிசையில்
மண்சட்டிச்சோறு பொங்கும்
செல்லாயிப்பாட்டி,
கொடுத்ததற்கெல்லாம் சேர்த்து
அப்புறம் பெண்டை நிமிர்த்துவிடுவான்
என்ற சூட்சமமறியா
வைக்கோலை ருசித்து ரசித்து
உண்ணும் காளை மாடுகள்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
இந்தகவிதையை
கிராமத்தின் படம் வரைந்து
பாகங்கள் குறியென்ற
உங்கள் பேரன் பேத்திகளின்
பள்ளிப்புத்தக வினாக்களுக்கு
விடையளிக்க இது தேவைப்படலாம்.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

Thursday, July 3, 2008

நின்று போன தரிசனங்கள்



நமது சண்டைகளில் நொறுங்கிக் கிடக்கும்
கண்ணாடித் துகள்களைக் கேட்டால்
அது கதறிச்சொல்லும்
நமதுறவின் சிதறாத உறுதிப்பாட்டை

நமது கோபங்களில் சிக்கிச்சீரழிந்த
தலையணைகள் கூறும்
நமது பந்தங்களின் நெருக்கமான
கன அழுத்தத்தை

மாட்டிவிட்டுத்தான் மறு வேலையென்று
அப்பாவின் வருகை பார்த்து
நீ அழுது வடித்த கண்ணீரை தாங்கிய
நமது வீட்டு முற்றம் சொல்லும்
வடியாத நமதன்பின் தேக்கங்களை

நீ தூங்குகையில் நானும்
நான் தூங்குகையில் நீயும்
ஒருவொருக்கொருவர் மாற்றி
மீசையிட்டுக்கொண்ட
பேனா பறைசாற்றும்
கசடறியா நம் தெய்வீக முகங்களை

நேற்று வந்த ஒருவனுக்காய் நீயும்
இன்று வந்த ஒருத்திக்காய் நானும்
நமது பிரியங்களின் ஒரு சதவீதத்தை
குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற
ஜீரணிக்க முடியா சில நிதர்சனங்களில்
நின்றுபோகின்றன நமது தரிசனங்கள்

அடுத்த ஜென்ம நம்பிக்கையை
அனுவளவு அடைந்திருப்பின்
கை கூப்பி உனை கேட்டிருப்பேன்
அதிலாவது பிரிவொன்றை ஏற்கா
தொப்புள் கொடி உறவை
வரமாய் வாங்கி வாவென்று.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com

நொந்துதல்களில் வெந்து தொலைப்போம்



குத்தீட்டியால் குருதி வழிய வழிய
குத்தப்படுவதை பிடித்தமென்கிறாயா?

உன்னுடமர்ந்து உரையாடிக்கொண்டே
உன்னை பிணமாய் படுக்க வைப்பவனில்
பாசம் கொல்லப் போகிறாயா?
ஆனால் அவ்விருவருமே கொலைகாரர்கள்.

கத்தக்கூடவியலா கத்தி முனையில்
களவாடப்படுவதை நேசித்துக்கொள்கிறாயா?
இரவு உன்னுடன் படுத்தெழுந்து
அதிகாலையில் அனைத்தையும்
அபகரிக்கப்போகும் சாணக்கியன் ஒருவனை
பூஜித்துக்கொள்ளப் போகிறாயா
ஆனால் அவ்விருவருமே திருடர்கள்

இரு பெரும் மூதேவிகளை விட
மூன்றாம் மூதேவி ஒருவனை
முக்கிய சீதேவியாக்கலாமென்று
மேதாவித்தனமாய் நீ யோசித்தால்
இரு கரம் நீட்டி உனை தூக்கியெடுத்து
பத்திரமாய் அவ்விருவரில் ஒருவரிடம் சேர்த்து
பணப்பெட்டியுடன் பதுங்கிக்கொள்வான்
அந்த மூன்றாம் மூதேவி

ஆபத்பாந்தவனாய் ஒன்று சொல்கிறேன்
எனக்குத்தெரிந்த வரை மட்டுமல்ல
எவருக்கும் தெரிந்த வரை
ஏக மனதான தீர்ப்பும் அதுதான்
உன் வீட்டு ஈசாணி மூலை தேடிப்பிடித்து
வடகிழக்காய் ஒருக்கணித்துப் படுத்து
பேசாமல் விதியை நொந்து கொள்
ஐம்பதாண்டு கால சுதந்திர இந்தியா
வேற்றுமையில் கண்ட ஒற்றுமைகளை விட
நொந்துதல்களில் கண்ட ஒற்றுமை அதிகம்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
junaidhasani@gmail.com