Wednesday, July 9, 2008

மயிரிழையில் மஞ்சம்



ஆடி அசைந்து அலுத்த
பாதி சதைகளும்
அலுப்புத் தட்டாமல் ஆட்டமிடும்
மீதி சதைகளும்
கவ்விப்பிடித்திருக்கின்றன
மொத்த சதைகளை.

ஓட்டம் கண்டே உறைந்து போன
கிழட்டுக் குருதிகளும்
உஷ்ணம் தணியாமல்
உறவாடிக் கொண்டிருக்கும்
அவற்றின் பேரன் பேத்திகளும்
அழுகிப்போகும் பிண்டத்திற்கு
உப்பிட்டுக்கொண்டிருக்கின்றன.

மெதுவாய் முறைத்துச்செல்லும்
சில சம்பிரதாய நினைவுகளும்
அருகில் வந்து எச்சரித்துச் செல்லும்
ஆரம்ப கால பிரயாசைகளும்
இன்னுமா இருக்கிறாயென்று
கூறுபோட்டுச் செல்லும்
சில விரோதிக் கனவுகளும்
நிலுவையிலாகா வண்ணம்
என்னை உயிருடையான் பட்டியிலில்
இன்னும் இழுத்திப்பிடித்திருக்கின்றன.

தொண்டை வரை எவ்வி விட்ட
உயிர்க்கற்றையை
கெஞ்சிக் கூத்தாடி உள் அனுப்பும்
தீவர பணியில் இறங்கியிருக்கின்றன
இவையனைத்தும சேர்ந்து.

பற்றியெரியும் ரோமில்
பிடிலிசைத்த பேதகனாய்
தூரத்தெரியும் ஒருத்தியின் முன்னழகில்
மஞ்சமிட்டக்கொண்டிருக்கும் என் மனதை
என்னவென்று சொல்வது!

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி.
junaidhasani@gmail.காம்.