Thursday, December 18, 2008

மரணம்

விரிந்த முடி கோலமாய் குருதியகன்ற விழிகளில்
ஒப்பாரி கலந்த ஓராயிரம் பிராதிட்டுச் செல்வது
எம் குல பெண்களுக்கு வாடிக்கையானது

குண்டு கிழித்த மாமன் மாரில் ஒரு நாள்
வெள்ளமடித்த மகனைப் பாடி மறு நாள்
இடி மடி சேர்ந்த மூப்பெய்யா சகோதரனையும்
பாதைவழிப் பேருந்து பரலோகமிட்ட சித்தப்பனையும்
அடுப்புத் தீயிலோ அல்லாது பிற கடுப்புத் தீயிலோ
தோலுரிந்துத் தொங்கும் ஒரு உறவுக்காரியையும்
இடை இடையே இழுத்து அழுது குறுகிக் குறுத்து
தன் தேவனைப் பாடி காலனைச் சாடி
இறுதியாய் விதியென்று கதி சேர்கையில்
குசலம் கேட்டு குட்டையின் அடி கிண்டுகிறார்கள்
அது ஓய்ந்து கழிந்த அடுத்தடுத்த நாட்களிலும்

கதவிடுக்குகளில் கதறும் காற்றொலிகளில்
இரவின் மௌனமுடைக்கும் ஜந்துக்களான ரீங்காரங்களில்
சூழ்ந்த கதிர்களுக்கு மத்தியிலான கதிரவனில்
மாண்டவர்கள் கரைந்து கொண்டிருப்பதாய்
அலறுகிறார்கள் அவர்களை ஆண்டவர்கள்

அதிக பட்சம் இன்னும் பத்து நாட்கள்
பேரிடி சூழல் அகற்றும் பேறு கால அவகாசங்களைப் போல்
மந்திரமோ தந்திரமோ இரண்டும் சேரா எந்திரமோ!
எதைக்கொண்டாயினும் அம்மரணத்தை
முயற்சியுங்கள் முன்னால் கூற!
ஊனறுக்கும் உரத்தலுக்கு உரித்தாக்கட்டும் தங்களை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
www.junaid-hasani.blogspot.com

1 comment:

ரிபா-ரியாஸ் said...

கருத்து போடலாம்னு வந்தேன்
நீங்க கந்தசாமி மட்டும்தான் கருத்து போடலாம்னு சொன்னதால திரும்பிட்டேன். ஹி..ஹி..ஹி