Monday, December 8, 2008

உற்றமும் சுற்றமும்

நன்றாய் புன்முறுவலித்து
எழுந்து இருக்கை தந்து
வராதவர்களையும் நலம் கேட்டு
திங்க தங்க வைத்தனுப்பினாலும்
குற்றம் சொல்லி அலைகின்றன சுற்றங்கள்
போஷாக்கில்லாத என் தேகம் பற்றி
மழிக்காத என் தாடி பற்றி
இஸ்திரியிடப்படா என் மேலாடை பற்றி
வஸ்துக்கள் சிதறிக் கிடக்கும்
ஒழுங்கற்ற என்னில்லம் பற்றி
இப்படியாய்
பல்கிப் பெருகிச் செல்கின்றன
அவர்களின் தண்டோராக்கள்
இப்பொழுதெல்லாம்
அரைக் கதவு திறந்து
உதடு விரியா புன்னகையிட்டு
கண்டிப்பாய் வருவதாய்
வெறும் வாய் வேடமிட்டு
கதவறைந்துச் சாத்தி விடுகிறேன்
மேட்டுக்குடியனாய்
வாசலிலேயே வைத்தனுப்பி விட்டானென்ற
ஒரேயொரு குற்றம் சொல்லி
சனியன்கள் தொலைந்து போகட்டுமென்று.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

No comments: