Monday, December 8, 2008

சமூகம்

தெருவெங்கும் அல்லோலப்படுகின்றன
என் பற்றியான பேச்சுக்கள்
தெரு முக்கு பிள்ளையார் சந்நிதி முதல்
கடைசி அய்யனார் வீட்டு வரை
ஒவ்வொரு காற்றுத் துகள்களிலும்
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
என் மீதான சாடல்கள்
இவன்தான் அவனென்று
பகிரங்கமாகவே சுட்டுகிறார்கள்
குழாயடிப் பெண்கள் தங்களுக்குள்
மூணுச் சீட்டாடும் வாலிபப் பட்டாளமும்
அடுத்தவர் தொடை சொறிகிறார்கள்
அருகில் வந்து விட்டேனென்று
விரைந்து செல்லும் கால்களும்
என் வீட்டருகில் மந்தப்படுகின்றன
புதிய செய்தி கிடைக்குமாவென்று
நன்றாய் தெரிந்தவர்களில் சிலர்
நிறுத்தி வைத்து குசலம் கேட்கிறார்கள்
இதெல்லாம் கால தேவனின் கட்டாயங்களென்று
அறிவுரைப்பதாய் தொண தொணத்துச் செல்கிறார்கள்
நரை தட்டிய கிழவர்கள்
திரும்ப திரும்ப
திரும்ப திரும்ப
ஆனவற்றை முதலிலிருந்து கேட்டு
வெந்த ரணத்தில் கத்தி கடப்பாறை பாய்ச்சுகிறது
உறவினப் பட்டாளமொன்று
இரண்டொரு நாட்கள் கழிந்து விட்டிருந்தது
சுத்தமாய் அமுங்கிப் போயிருந்தன
என் பற்றியான பேச்சுக்கள்
எத்தனை முறை தெருவில் நடந்தும்
என்னை ஏறெடுக்கவில்லை எவரும்
பரிதாபப்பட்டுக் கொண்டேன்
வசமாய் சிக்கியிருக்கும்
அந்த இன்னொருவனுக்காக.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

No comments: