Tuesday, August 5, 2008

அடை முட்டைகள்

எதிர் பாராதவாறு
காதுகளில் அறையப்படும்
எதிராளிகளின் சில வார்த்தைகள்
அப்படியே புடம் போட்டு
அமர்ந்து கொள்கின்றன

அவ்வப்போது வலியைக் கூட்டி
இருத்தலை உணர்த்தும் ரணங்களாய்
உடற்கூறுகளில் ஊடுருவிப் போய்
உறுத்திக்கொண்டே இருக்கின்றன

இருந்த போதும் நொந்து கொண்டு
இல்லாத போது வெந்து கொண்டு
இப்படியாய் சராசரி வாழ்க்கை
ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருப்பினும்
அந்த வார்த்தைகள் மட்டும்
சற்று முன் மூட்டிய தணலாய்
கொட்ட கொட்ட விழித்திருக்கின்றன

அவ்வப்போது வாழ்வில் நிகழும்
பெருத்த ஏற்றங்களுக்கு கூட
அவ்வார்த்தைகள் சமாதானமடைவதில்லை

வீறிட்டு அழும் குழந்தையை
தேற்றும் கிலுகிலுப்பைகளாய்
தற்சமய சரிகட்டுதல்களுக்கெல்லாம்
அதன் வீரியம் குறைந்து போவதில்லை

கர்ப்ப காலம் கழிந்த
கருவறைக் குழந்தையாய்...

பூமியைப் பிளந்து பீய்ச்சியடிக்கும்
எரிமலைக் குழம்புகளாய்...

எதிராளியின் முன் தோன்றும்
முழு உருவம் அடையும் வரை
உடலின் உஷ்ணத்திற்குள்
அடை முட்டைகளாகவே
அடங்கிக் கிடக்கின்றன

எவருடைய ஏடாகூட
எக்குத்தப்பான வார்த்தைகளுக்காக
நுனி மூக்கு கோபத்தில்
அவசர வார்த்தைப் பிரயோகம் செய்து
அதை குறை பிரசவமாக்கி விடாதீர்கள்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி

No comments: