Tuesday, August 5, 2008

காவு கொள்ளும் கண்கள்



கொல்லைப் புறங்களில்

நுழைந்து வெளியேறும்

சில கூடாத ஆசாமிகளாய்

இதயங்களை விட்டு விட்டு

கண்களின் வழியாக

உள்ளுக்கிறங்குகின்றன

சில காட்சிகள்



தரம் பிரித்து

தூசி தட்டி

மூளைக்கு அனுப்பும்

வண்ணான் பணி பற்றியெல்லாம்

கண்கள் கசக்கிக் கொண்டிருப்பதில்லை

தங்கள் மூளைகளை



காட்சிகளின்

முதல் பரிணாமங்களையும்

இறுதி முடிவுரைகளையும்

மூன்றாந்தர விஷயமாகத்தான்

கண்களின் கண்களில் படுகின்றன



காட்சியின் தத்ரூபம் பற்றிய

உள்ளம் எடுத்துரைக்கும்

உபதேசத்துக்கெல்லாம்

கண்கள் தாழ்த்தி விடுவதில்லை

தங்கள் காதுகளை



இருத்திக் கொண்ட

காட்சிகள் வழியே

விறு விறுவென்று

தன் கால்களை அசைத்து

பயணப்பட்டு விடுகின்றன

கண்கள்

பாதி பாதையில்

பாதை முடிந்த பிறகும்

உடுத்தியிருக்கும்

மேல் சட்டையாய்

தங்கள் பழிகளை

உருவிக் கொண்டு

கூசாமல்

இன்னொரு பயணங்களை

தேட ஆரம்பித்து விடுகின்றன



அறியாத புரியாத ஒருவன்தான்

எங்கிருந்தோ விரோதியாய்

குதிக்க வேண்டிய

அவசியங்களெல்லாம் இல்லை

சதா உங்களுக்காய்

அழுது வடிவதாய்

சொல்லிக் கொண்டிருக்கும் கண்கள்தான்

தேரிழுத்து தெருவிலிடும் பணிகளை

கச்சிதமாய் செய்து முடிக்கின்றன.



எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி



No comments: