Tuesday, August 5, 2008
காவு கொள்ளும் கண்கள்
கொல்லைப் புறங்களில்
நுழைந்து வெளியேறும்
சில கூடாத ஆசாமிகளாய்
இதயங்களை விட்டு விட்டு
கண்களின் வழியாக
உள்ளுக்கிறங்குகின்றன
சில காட்சிகள்
தரம் பிரித்து
தூசி தட்டி
மூளைக்கு அனுப்பும்
வண்ணான் பணி பற்றியெல்லாம்
கண்கள் கசக்கிக் கொண்டிருப்பதில்லை
தங்கள் மூளைகளை
காட்சிகளின்
முதல் பரிணாமங்களையும்
இறுதி முடிவுரைகளையும்
மூன்றாந்தர விஷயமாகத்தான்
கண்களின் கண்களில் படுகின்றன
காட்சியின் தத்ரூபம் பற்றிய
உள்ளம் எடுத்துரைக்கும்
உபதேசத்துக்கெல்லாம்
கண்கள் தாழ்த்தி விடுவதில்லை
தங்கள் காதுகளை
இருத்திக் கொண்ட
காட்சிகள் வழியே
விறு விறுவென்று
தன் கால்களை அசைத்து
பயணப்பட்டு விடுகின்றன
கண்கள்
பாதி பாதையில்
பாதை முடிந்த பிறகும்
உடுத்தியிருக்கும்
மேல் சட்டையாய்
தங்கள் பழிகளை
உருவிக் கொண்டு
கூசாமல்
இன்னொரு பயணங்களை
தேட ஆரம்பித்து விடுகின்றன
அறியாத புரியாத ஒருவன்தான்
எங்கிருந்தோ விரோதியாய்
குதிக்க வேண்டிய
அவசியங்களெல்லாம் இல்லை
சதா உங்களுக்காய்
அழுது வடிவதாய்
சொல்லிக் கொண்டிருக்கும் கண்கள்தான்
தேரிழுத்து தெருவிலிடும் பணிகளை
கச்சிதமாய் செய்து முடிக்கின்றன.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment