காய்த்த உன் ரேகைகளால்
நெட்டி நிமிர்த்தப்படுகின்றன பல ஜாதகங்கள்
நெல்லுக்கலையும் ஜோசியக் கிளியாய்
கணித்துவிட்டு முடங்கிப் போகிறாய் நீ
நாளை விழக் கிடக்கும் நாலு சுவற்றுக்குள்
காற்றிறைத்த உள்ளங்கை சாத மணலை
உன் எலும்புக்கூட்டு மூச்சிலுத்து ஊதுகையில்
உன் கறி சேர்ந்த நாலு கறியிலொன்றை
நாசூக்காய் யோசித்தெடுப்பான் அவன்
மெலிந்த தேகத்து மேலஸ்திரம் உருவுகையில்
செருப்பிறைத்த கரும் புள்ளிக்காய்
கலங்கும் அவன் கண்கள்
தேனொழுகும் அவனகன்ற வாயில்
இம்மியளவும் மெய்யொழுகாது
வரும்படி வரவில் வாய் பிளந்து
வலது கை நீதானென்பான்
உதறிச் செல்வான் செல்கையில் செருப்பாய்
அதி அத்தியவாசியமல்லாதிற்காய் பல்லிலிக்கையில்
கூலியைக் குறைக்க குடைகிறான் எனக்கொள்
வீட்டுச் செல்லப் பிள்ளையெனும் அவன் பெண்டீர்
சீனியும் சீமையெண்ணையும் ரேஷனிடுகையில்
மறுநாள் அவ்வாசல் வரை விட்டால்
பூர்ண ஜென்ம புண்ணியமென மகிழ்
கறியும் கூட்டும் தேடி வந்து திணிக்கும்
நல்ல பழக்கம் வாய்க்கும் எப்பொழுதாவதளுக்கு
கூடி மிஞ்சிய இரண்டாம் நாளாணமாகிப் போனன்று
உடைந்த உள்ளமொட்டித் தேற்றிக்கொள்
உராய்கையில்தான் உயர்கிறீர்கள்
நீயும் சந்தனமும்.
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
Wednesday, November 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment