Wednesday, November 19, 2008

அக்கால ஆனந்தங்கள்

அது அந்தக் காலம்
கூரைக் கீற்று வழி மோகித்து
சிமிட்டொளிரும் நட்சத்திரங்களில்
சலனற்றுக் கரைந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
உச்சியில் உச்சந்தலையுரிக்கும்
வெயிலுக்கிரக வெம்மைகளின் கீழ்
இன்னும் திடமாய் ஊன்றுகிறேன்

அது அந்தக் காலம்
இடுப்பில் வழியும் சிறகடித்து
காற்று வழி மேகங்களினூடே
கனமற்றுத் திரிந்த காலம்
இப்படிச் சொல்லியபடியே
கணம் வடியும் கவலைகள் சுமையள்ளி
ஏற்கவியலா எடைச் சுமையில்
தொப்பென்று விழுந்து செல்கிறேன்

அது அந்தக் காலம்
தேனொழுகும் நாவுகள் சூழ
ஆறிய தேநீர் குவளையேந்தி
அவரவர் அப்பட்டங்களை
அவிழ்ந்து கொண்ட காலம்
இப்படிச் சொல்லியபடியே
தாழ்த்தும் செவிகளின்றி
தனிமைச் சாளரங்களினூடே
வெறுமை வடியுமிதயத்தில்
இரகசியங்களள்ளித் திணிக்கிறேன்

அது அந்தக் காலம்
இதமாய் இழையோடும்
இளையராஜா இடைக்கால ராகங்களில்
இதயம் கரைந்தொழுகிய காலம்
இப்படிச் சொல்லியபடியே
கதறிக் காதுடைக்கும்
கானா ஒலியை
உச்சஸ்தாயில் ஒலி நீட்டி
உடல் சுருக்கி உறங்கிப் போகிறேன்

கால நீட்சிக் கரைவுகளில்
கரைந்தோடுபவர்கள் நாங்களல்லரென்று
இறுக்கிப் பிடித்தமர்ந்திருப்பவர்களையும்
இடம் பொருள் கால ஏவல்கள்
ஒரு கை பார்த்து விடுகின்றன.


எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

No comments: